'தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்' - உத்தவ் தாக்கரே

இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், தேர்தல் ஆணையர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று  உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 
'தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்' - உத்தவ் தாக்கரே

இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், தேர்தல் ஆணையர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று  உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் பேசியதாவது, 'என்னிடமிருந்து எல்லாம் திருடப்பட்டது. எங்கள் கட்சியின் பெயரும் சின்னமும் திருடப்பட்டுவிட்டது. ஆனால், தாக்கரே என்ற பெயரை திருட முடியாது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு நாளை முதல் விசாரணைக்கு வருகிறது.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தீர்ப்பு வரும் வரை முடிவு எடுக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். 

தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் கட்சிகளின் சின்னம் மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையத்தைக் கலைக்க வேண்டும். தேர்தல் ஆணையக் குழுவை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். 

ஜனநாயக அமைப்புகளின் உதவியுடன் பாஜக ஜனநாயகத்தை அழித்து வருகிறது. பாஜக இன்று எங்களுக்கு என்ன செய்ததோ அதுவே நாளைக்கு வேறு ஒருவருக்கு நடக்கலாம். இதுவே தொடர்ந்தால் 2024-க்குப் பிறகு இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஒன்று இருக்காது' என்றார். 

மேலும், நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி ஆகியோரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். 

மகாராஷ்டிர அரசியல்: 

மகாராஷ்டிரத்தில் கடந்த 2019 பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தபோதும், முதல்வா் பதவி யாருக்கு என்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்ட சிவசேனை, பாஜக கூட்டணியில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா விகாஸ் அகாடி எனும் தோ்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்து ஆட்சிக்கு வந்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றாா்.

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூனில் ஏக்நாத் ஷிண்டே (அப்போதைய அமைச்சா்) தலைமையில் 40 சிவசேனை எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

உத்தவ் தாக்கரே அரசுக்கான ஆதரவை அதிருப்தி எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றதால், அவரது அரசு கவிழ்ந்தது. இதைத் தொடா்ந்து, ஷிண்டே தலைமையிலான சிவசேனை அணி, பாஜகவுடன் கூட்டணி சோ்ந்து ஆட்சியமைத்தது. முதல்வராக ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸும் பதவியேற்றனா். 

இதையடுத்து சமீபமாக, இரு அணிகளில் எது உண்மையான சிவசேனை அணி என இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடின. 

பெரும்பான்மையின்படி, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான், உண்மையான சிவசேனை என்று இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது. மேலும், கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி, தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், மகாராஷ்டிரத்தில் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இத்தோ்தல் முடியும் வரை உத்தவ் தாக்கரே அணியினா் ‘சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே)’ என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் பயன்படுத்திக்கொள்ள தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுகுறித்து உத்தவ் தாக்கரே கொடுத்துள்ள மனு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com