மத்திய அரசின் உத்தரவிற்கேற்ப தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ அணியினராக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பினரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவிற்கு எதிராக உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில் இதுகுறித்து பதிலளிக்க ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு 2 வார கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | இடைத்தேர்தலில் முறைகேடு? தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை!
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “இப்படி ஒரு தேர்தல் ஆணையத்தை இதுவரை பார்த்ததில்லை” என விமர்சித்துள்ளார்.
மேலும், “கடந்த சில நாள்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. நாட்டின் சுதந்திரமான அமைப்புகள் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இது சிறந்த உதாரணம். எனது மறைவிற்குப் பிறகு சிவசேனை கட்சியை ஏற்று நடத்தும் பொறுப்பு உத்தவ் தாக்கரேவிற்கு உள்ளது என பால் தாக்கரே தெரிவித்திருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியல் கட்சிகளின் மீதான தாக்குதல். ஆளும் மத்திய அரசிற்கு தேவையான முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. அதிகாரத்தை தங்களது கைகளிலேயே வைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது” என சரத் பவார் தெரிவித்தார்.