ஏர் இந்தியா விமானத்தில் முதியோர்களுக்கு 50% சலுகையா? உண்மை என்ன?
ஏர் இந்தியா விமானத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு பயணச்சீட்டில் 50 சதவிகித சலுகை வழங்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
ஏர் இந்தியா நிறுவன வலைதள பக்கத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பயணச்சீட்டில் 25 சதவிகித சலுகை வழங்கப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், ஏர் இந்தியா விமானத்தில், 50% சலுகை என்பது முற்றிலும் தவறான தகவல் எனத் தெரியவந்துள்ளது.
அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2022 ஜனவரி முதல் டாடா குழுமம் நிர்வகித்து வருகிறது. உள்ளூர் முதல் சர்வதேச பயண சேவைகளை ஏர் இந்தியா மூலம் டாடா குழுமமே கவனித்து வருகிறது.
டாடா குழுமத்திடம் வந்த பிறகு ஏர் இந்தியா சேவையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒன்றுதான் முதியோர்களுக்கு திருத்தம் செய்து வழங்கப்பட்ட பயணச்சீட்டு சலுகை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2014ஆம் ஆண்டு வரை 63 வயதுக்கு மேற்பட்ட (வெளிநாடுவாழ் இந்தியர் உட்பட) மூத்தக் குடிமக்களுக்கு பயணச்சீட்டில் 50 சதவிகித சலுகை வழங்கப்பட்டது.
ஆனால், டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிர்வாகத்தை வாங்கிய பிறகு, வருவாய் இழப்பை ஈடுசெய்ய 50 சதவிகித சலுகையை 25 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்த தகவல் ஏர் இந்தியா வலைதள பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.