ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் மகன் கரன் அதானி ஆகியோர், மகாராஷ்டிர பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மகாராஷ்டிர பொருளாதார ஆலோசனைக் குழுவில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி மின் துறை பிரதிநிதியாக செயல்படுவார்.
அதானி துறைமுகத்தின் தலைமை செயல் அதிகாரியான கரன் அதானி,
துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதாரப் பிரிவுகளுக்கு பிரதிநிதியாக செயலாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர பொருளாதார ஆலோசனைக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் அடங்கிய விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் மேத்தா, பிரையன் கேப்பிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமித் சந்திரா ஆகியோர் தனியார் துறை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விக்ரம் லிமாயி வங்கித் துறைக்கும், லார்சன் & டர்போ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.எம். சுபிரமணியன் பொறியியல் துறைக்கும்,
சர் பார்மா நிர்வாக இயக்குநர் திலிப் சாங்வி மருந்துகள் துறைக்கும், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனிஷ் ஷா, பாட்வே எஞ்சினீயரிங் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் பாட்வே உற்பத்தி துறைக்கும் பிரதிநிதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் உள்ளார். இந்தக் குழு 21 நபர்களை உள்ளடக்கியது.
இந்தக் குழுவின் தலைவரான என். சந்திரசேகரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
டாடா நிறுவனம், சென்னை போர்டு நிறுவனத்தை வாங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், முதல்வருடான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.