ராகுல் காந்தியை 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப்பயணம் முன்னெடுக்கப்படவில்லை என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களையும் சென்றடைந்து தற்போது ஹரியாணாவின் கர்னலில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கர்னலில் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ராகுல் காந்தியை 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப்பயணம் முன்னெடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து அவர் பேசியதாவது: பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்த முன்னெடுக்கப்படவில்லை. ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் சித்தாந்த ரீதியிலான நடைப்பயணம். இது ஒருவரின் தனிப்பட்ட நடைப்பயணம் அல்ல. இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் பொருளாதார சமத்துவமின்மை, சமூகத்தை பிளவுப்படுத்துதல் மற்றும் அரசியல் சர்வாதிகாரம் ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார் என்றார்.