லக்னௌ: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநில அரசியலில் மகத்தான ஆளுமையாக விளங்கிய கேசரிநாத் திரிபாதி, அம்மாநில சட்டப்பேரவைக்கு 6 முறை தேர்வு செய்யப்பட்டுள்ள. அம்மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். கவிஞரான அவர் பலப்புத்தகங்களை எழுதியுள்ளார்.
இதையும் படிக்க | வெறுப்புணர்வுக்கு எதிரானது இந்திய ஒற்றுமைப் பயணம்: ராகுல் காந்தி
88 வயதான கேசரிநாத் திரிபாதி வயதுமூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரிபாதி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், கேசரிநாத் திரிபாதி மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது, கூடுதலாக பிகார், மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பையும் வகித்ததை நினைவுகூர்ந்த மோடி, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை காலூன்றச் செய்ததில் திரிபாதியின் பங்கு முக்கியமானது. அம்மாநிலத்தின் மேம்பாட்டிற்காகக் கடினமாக உழைத்தவர். தமது சிறப்பான சேவை மற்றும் அறிவாற்றலுக்காக கேசரிநாத் திரிபாதி என்றும் மதிக்கத்தக்கவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.