பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைக்கவிருந்த வந்தே பாரத் விரைவு ரயிலை சேதப்படுத்தியதாக 3 பேரை விசாகப்பட்டினத்தில் போலீஸார் கைது செய்தனர்.
புத்தம் புதிய அதிவேக ரயிலின் பெட்டிகளில் ஒன்றின் மீது புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
வந்தே பாரத் ரயிலின் கண்ணாடிகளை சேதப்படுத்தியது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் குடிபோதையில் இருந்ததால் இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) வழக்கைக் கையாளுகிறது என்று அவர் கூறினார்.
கஞ்சர்லாபாலத்தில் உள்ள ரயில் பெட்டி வளாகம் அருகே கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. ஒரு ஜன்னல் கண்ணாடி முழுவதுமாக உடைந்தது, மற்றொன்று விரிசல் ஏற்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பராமரிப்பு சோதனை மற்றும் சோதனை ஓட்டத்திற்காக வந்தே பாரத் ரயிலின் ரேக் ஒன்று புதன்கிழமை சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
வந்தே பாரத் விரைவு ரயிலை ஜனவரி 19ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 15ஆம் தேதி பிரதமர் வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. இது தெலுங்கு மக்களுக்கு ஒரு சங்கராந்தி பரிசாக இருக்கும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்தார்.