மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மத்திய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.
சரத் யாதவ் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | சரத் யாதவின் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சரத் யாதவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சரத் யாதவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, 'ஷரத் யாதவ் மறைவு நாட்டிற்கும், நாட்டின் அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் தனது வாழ்நாள் முழுவதும் பிற்படுத்தப்பட்ட, எளிய மக்களுக்கான பிரச்னைகளை எழுப்பினார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் வழங்கட்டும்' என்று கூறினார்.
இதையும் படிக்க | ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவா் சரத் யாதவ் காலமானாா்