உலகின் மீக நீண்ட நதிப் பயண அனுபவத்தை வழங்கும் எம்வி கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார்.
நாட்டின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு நதி வழியாகவே பயணிக்கும் வகையில், இந்த சொகுசுக் கப்பல் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
வாராணசியிலிருந்து சுமார் 51 நாள்களுக்கு 3,200 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணித்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதிக்குச் செல்கிறது.
இந்த சொகுசுக் கப்பல் நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வகையில் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பாட்னா, பிகார் உள்ளிட்ட நகரங்களின் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா நகரங்களை இந்த சொகுசுக் கப்பல் பயணம் இணைக்கிறது.
இந்த சொகுசுக் கப்பலில் மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 18 சொகுசு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் 36 பயணிகள் மட்டுமே பயணிக்கும் வகையில் அனைத்து அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை இந்த படகு சேவை இயக்கப்படவுள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படவுள்ளதால், மழைக்கால மாதங்களில் சேவை நிறுத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்வழித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் சுற்றுலாத் துறையும், வணிகமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.