/

பாலம் வேண்டாம்.. போராடும் பழங்குடியினர்

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் இடையே பாலம் அமைப்பதை எதிர்த்து 15வது நாளாக போராடி வருகிறார்கள்.

News image

பாலம் வேண்டாம்.. போராடும் பழங்குடியினர்

Updated On :19 ஜனவரி 2023, 7:09 am

DIN


கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் இடையே பாலம் அமைப்பதை எதிர்த்து 15வது நாளாக போராடி வருகிறார்கள்.

இந்திராவிதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் பாலத்தால் சுரங்க நிறுவனங்களுக்குத்தான் ஆதாயம் என்றும், இங்கு வாழும் மக்களின் நலன் பாதிக்கப்படும் என்றும் பழங்குடியின மக்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

எத்தனை ஜோஷிமட் ஏற்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படாத அரசு அதிகாரிகளோ, இந்த மேம்பாலம் கட்டப்பட்டால் அதனால் ஏற்படப்போகும் நன்மைகளை பழங்குடியின மக்களுக்கு எடுத்துக் கூறினால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட எல்லைக் கோடாக இதுவரை இருந்த இந்திராவதி ஆற்றை, கடந்து செல்ல இந்த பாலம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களும், இங்கு பாலம் அமைக்கப்பட வேண்டாம். அவ்வாறு அமைக்கப்பட்டால் அது இங்குள்ள வன மற்றும் ஆற்றின் வளங்கள் கொள்ளையடிக்கவே பயன்படுத்தப்படும் என்று நிதர்சனமான உண்மையை அறிந்து கொண்டு பாலத்தை எதிர்த்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கை வளத்தை அழிக்கவும், இங்குள்ள வனப்பகுதியை கொள்ளையடிக்கவுமே இந்த பாலம் அமைக்கப்பட்டு வருவதாகவும், சுரங்கப் பணிகள் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய நிறுவனங்கள் இப்பகுதியில் அமைக்கப்படுவதற்காக இயற்கை வளங்கள் அழிக்கப்படும் என்றும் அஞ்சுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.