

மும்பை விமான நிலையத்தில் கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதீத கார்பன் வெளியீட்டால் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால் உலக நாடுகளும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவைக் குறைக்க சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
இந்தியாவில் கார்பன் வெளியீட்டைத் தடுக்க புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடு முழுவதும் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக விமான நிலைய பயன்பாட்டுக்கான வாகனங்களில் மின்சார வாகனங்களை ஈடுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 45 மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டுக்குள் 60ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இந்த விமான நிலையத்தில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.