தெலங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜக புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறையின் அமைச்சராக உள்ள ஜி.கிஷண் ரெட்டியை தெலங்கானா மாநில பாஜக தலைவராக நியமித்துள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் பஞ்சாப் மாநிலத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் ஜாக்கர் (69) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி (65) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் புதிய மாநிலத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.புரந்தேஸ்வரி (64) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டியை (62), தேசிய பாஜக செயற்குழு உறுப்பினராக ஜெ.பி. நட்டா நியமித்துள்ளார்.