பாஜக 'வாஷிங் மெஷின்' என்றும் மோடி 'வாஷிங் பவுடர்' என்றும் விமரிசித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஒரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததுடன் ஆளும் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
அஜித் பவார் ஏற்கெனவே 2019ல் பாஜகவுடன் இணைந்து பின்னர் சிறிது காலத்திலேயே அதிலிருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஜித் பவார் கட்சி மாறியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் விமரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக வாஷிங் மெஷின் என்றும் மோடி வாஷிங் பவுடர் என்றும் விமரிசித்துள்ளார்.
"அரசியல் தலைவர்களின் கறைகளைக் கழுவ, மத்திய புலனாய்வு அமைப்புகளை 'வாஷிங் பவுடராக' பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக" என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
பாஜக எனும் வாஷிங் மெஷின் அதன் புலனாய்வு அமைப்புகளை (வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை (ICE - Incometax, CBI, ED)) வாஷிங் பவுடராக பயன்படுத்தி நேற்று மும்பையில் மீண்டும் சலவை செய்யத் தொடங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விமர்சனம் செய்தவர்கள் ஏமாற்றமடைவார்கள். பாட்னாவைத் தொடர்ந்து அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூலை 17, 18ல் பெங்களூருவில் நடைபெறும். மும்பை அரசியல் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் உறுதியை வலுப்படுத்தும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், மோடி வாஷிங் பவுடர் அனைத்து கறைகளையும் தூள் தூளாக்கும், அனைத்து ஊழல்வாதிகளையும் அமைச்சர்களாக்குவது உறுதி' என்று பதிவிட்டுள்ளார்.
இதுபோல நெட்டிசன்கள் பலரும் இந்த போஸ்டரை பகிர்ந்து விமரிசித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் அஜித் பவாரின் புகைப்படத்தை இணைத்து மீம் போட்டு பகிர்ந்து வருகின்றனர்.