ஆளுநருடன் தமிழக அரசு மோதல் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது: ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழக ஆளுநருடன், தமிழக அரசு மோதல் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

சேலம்: தமிழக ஆளுநருடன், தமிழக அரசு மோதல் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாம் பல்வேறு மொழிகளை பேசுபவர்களாக இருந்தாலும், கலாசாரம் பண்பாட்டை பொறுத்தவரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். அந்த வகையில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காசி தமிழ் சங்கமம், செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு சிறப்பாக நடத்தியுள்ளது. தமிழின் பெருமையை நாடு  முழுவதும் எடுத்துச் செல்வதற்கு இந்த நிகழ்ச்சிகள் பேருதவி புரிந்துள்ளது.
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பாலும் ஹிந்தி மொழி பேசப்படுகிறது. உள்ளூர் மொழிகளும் உள்ளன. காசி தமிழ் சங்கமம் மற்றும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைப் போல ஜார்க்கண்ட் மாநிலத்துடன் தமிழ்நாடு இணைந்து நிகழ்ச்சி நடத்த எதிர்காலத்தில் திட்டமிடப்படும். தமிழகமும் ஜார்க்கண்ட் மாநிலமும் இணைந்து வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் என்னுடைய கவனம் இருக்கிறது. மருத்துவம், தொழில்துறை மின்சாரத்துறை உள்ளிட்ட பலதுறைகளிலும் இருமாநில ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படும். அதற்கான செயல்வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றார்.
 
தமிழகத்தில் அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு நிலவுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "அரசின் அணுகுமுறையும் அனுசரணையும் ஒரேமாதிரி இருக்க வேண்டும். அப்படி இருக்கிறபோது ஆளுநரின் அணுகுமுறையும் அதை சார்ந்ததாக மாறும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கின்றன. அரசும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அப்போது ஆளுநரின் அணுகுமுறையும் மக்கள் நலன் சார்ந்தே அமையும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர் அவர் கடமையைச் செய்கிறார். அதை வேறொரு கண்கொண்டு பார்ப்பதாக நான் உணர்கிறேன். எனக்குத் தெரிந்தவரையில் தமிழக ஆளுநர் தமிழக மக்கள் நலனில் அதிக அக்கறைக் கொண்டவராக இருக்கிறார். தமிழக அரசு ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், ஆளுநரை அனுசரித்து அவருடைய முழு ஆதரவையும் பெற வேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும். ஆளுநர் என்பவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் இல்லை" என்றார்.
 
பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்று கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "அரசியல் பேசக்கூடாது என அண்ணாமலை கூறியதற்கு அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com