மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறதா என்ற கள நிலவரத்தை பார்க்காமல் முந்தைய அரசுகள் ஏசி ரூம்களில் அமர்ந்துகொண்டு நலத்திட்டங்களை உருவாக்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனது நாடாளுமன்ற தொகுதியான வாராணசி தொகுதியில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் இன்று செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகளே உண்மையான மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்கான எடுத்துக்காட்டுகளாகும். முந்தைய அரசுகள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறதா என கள நிலவரம் தெரியாமல் ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை உருவாக்கினர். ஆனால், பாஜக அரசு பயனாளிகளை சந்தித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன்மூலம், அந்த நலத்திட்டத்தின் பயன்பாடும், அதன் விளைவுகளும் எளிதில் தெரிய வரும் என்றார்.
வாராணசியில் ரூ.12,100 கோடி மதிப்பிலான 29 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.