அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்குக்கு பணம் சென்றடையும் திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை மறுநாள் (ஜூலை 10) முதல் தொடங்கி வைப்பார் என கர்நாடக உணவு வழங்கல் துறை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா தெரிவித்தார்.
15 நாள்களில் மொத்த பணமும் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நாளை மறுநாள் (ஜூலை 10) மாலை 5 மணிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்கள். அன்னா பாக்யா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். 15 நாள்களில் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் செலுத்தப்படும். மாநிலத்தில் 4.41 கோடி பயனாளிகள் உள்ளனர். மத்திய அரசிடம் இருந்து அன்ன பாக்யா திட்டத்துக்காக அரிசியினைப் பெற முயற்சித்தோம். ஆனால், மத்திய அரசு அரிசி வழங்க மறுத்துவிட்டது. கர்நாடகம், ஆந்திரம் மற்றும் பிற மாநிலங்களிலும் இத்திட்டத்துக்காக அரிசியினை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அரிசிக்கான விலை அதிகமாக இருந்தது. அதனால் அரிசிக்குப் பதில் பயனாளிகளுக்கு பணம் வழங்க அரசு முடிவு செய்தது என்றார்.