இந்தியாவின் பிரபல சாலையோர உணவான பானிபூரி அறிமுகமான நாளான இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரம்(டூடுல்) வைத்து தனது முகப்பு பக்கத்தை அலங்கரித்துள்ளது.
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு நாள்களில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(கூகுள் டூடுல்) வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. அந்தவகையில், முதன்முதலில் பானிபூரி அறிமுகமான நாளை கொண்டாடும் வகையில் பானிபூரியுடன் ஒரு கேம் வெளியிட்டு டூடுல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2015, ஜூலை 12ல் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு உணவகம் 51 வகையான பானிபூரிக்களை செய்து உலக சாதனை படைத்தது. அப்போது தான் இந்த பானிபூரி பொதுமக்களுக்கு அறிமுகமானது. அதன்பிறகு இந்தியா முழுவதும் பானிபூரி பிரபலமானது.
பானிபூரியை இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு, கொண்டைக் கடலை, மசாலா மற்றும் சுவையூட்டப்பட்ட புதின நீர் கலவையை சின்ன பூரியில் வைத்து சாப்பிடும்போது அதன் சுவை அமோகமாக இருக்கும்.
பஞ்சாப், காஷ்மீர், தில்லி உள்ளிட்ட பகுதிகளில் கோல் கப்பே என்று அழைக்கின்றனர். மேற்குவங்கம், பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதை புச்காஸ், குப்-சுப் போன்ற பல பெயர்களில் விற்கப்படுகிறது.
பானிபூரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாகும். பூரியில் மசாலா கலவையுடன் புதினா கலந்த தண்ணீரில் நனைத்து, அதை கீழே கசியவிடாமல் சாப்பிடுவதும், பூரி நொறுங்காமல் ஒரே வாயில் அப்படியே சாப்பிடுவதிலும் ஒரு தனித்திறமை வேண்டும் என்றே சொல்லலாம்.