தேசிய தலைநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதைக் கருத்தில்கொண்டு ஜூலை 16-ம் தேதி வரை தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற டிடிஎம்ஏ கூட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலைமை தாக்கினார். அப்போது பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தில்லி முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியது, தலைநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு வரும் ஞாயிறு(ஜூலை 16) வரை பள்ளிகள் மூடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், யமுனை ஆற்றின் நீர்மட்டம் முதல்முறையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பம்புகள், இயந்திரங்களில் தண்ணீர் புகுந்ததால் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தில்லியில் ஆழ்குழாய்க் கிணறுகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தில்லியில் ஓரிரு நாள்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம்.
அத்தியாவசிய சேவைகளை தவிர கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாது. நிவாரண முகாம்களில் கழிப்பறை மற்றும் குளியலறை பிரச்னை நிலவுவதால், முகாம்கள் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
யமுனையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 208.4 மீட்டராக உயர்ந்துள்ளது. தலைநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 16,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தில்லியில் பல சாலைகள் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளன. தலைநகரில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.