சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
எல்பிஎம் 3- எம்4 ராக்கெட்டின் மூன்று அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில்,பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானி களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ குழு மற்றும் சாதனையை நிறைவேற்ற அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதையும் படிக்க | விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்திற்கான நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. சந்திரனுக்கான இந்த பயணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து, 'சந்திரயான்-3 இந்திய விண்வெளியின் நீண்ட பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி, உயரமாக செல்கிறது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தங்களின் புத்தி கூர்மைக்கு தலை வணங்குகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.