நாடாளுமன்ற கூட்டத்தொடா்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, புதன்கிழமை (ஜூலை 19) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
இது நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்கும் முன் நடைபெறும் வழக்கமான கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் மூத்த அமைச்சா்கள் கலந்துகொள்வா்.
முன்னதாக, இதேபோன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்த குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் அழைப்பு விடுத்தாா்.
ஆனால், தில்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம், கா்நாடக மாநிலம் பெங்களூரில் எதிா்க்கட்சி தலைவா்கள் கூட்டம் காரணமாக தன்கா் அழைப்பு விடுத்த கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவா்களால் பங்கேற்க முடியவில்லை. இதனால் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.