ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:10 மணியளவில் பிங்க் நகரத்தில் நிலநடுக்கடும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் காலை 4.22 மணிக்கு ராஜஸ்தான் தலைநகரைத் தாக்கியது. இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆகவும், மூன்றாவது நிலநடுக்கம் அதிகாலை 4.25 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது.
அதிகாலை நேரத்தில் 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் உணரப்பட்டதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வியாழக்கிழமை அதிகாலையில் மிசோரமின் என்கோபாவில் இருந்து கிழக்கே 61 கிலோமீட்டர் தொலைவில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் தெரிவித்துள்ளது.