ஐஐடி-ஹைதராபாத் மாணவர் கடலில் விழுந்து தற்கொலை
விசாகப்பட்டினம்: ஐஐடி - ஹைதராபாத்தில் படித்து வந்த 20 வயது மாணவர், தேர்வுகளில் தோல்வி அடைந்ததால் மன விரக்தியில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனவத் கார்த்தி என்ற மாணவர், ஜூலை 19ஆம் தேதி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், ஜூலை 20ஆம் தேதி மீனவர்களின் உதவியோடு மாணவரின் உடல் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
ஐஐடி-ஹைதராபாத் மாணவரான இவர், படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாததால், தேர்வுகளில் தோல்வி அடைந்ததாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்தி, இந்த துயர முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதலில், ஜூலை 17ஆம் தேதி விடுதியிலிருந்து காணாமல் போனதாகத் தகவல்கள் வந்தன. இதையடுத்து அவரது செல்லிடப்பேசி சிக்னலை சோதித்ததில், அது ராமகிருஷ்ணா கடற்கரையில் கடைசியாக இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களை சோதித்தபோது, அவர் அபாயப் பகுதிக்கு அருகே நடந்து சென்றது பதிவாகியிருந்தது.
இவர் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்திருந்ததும், தெலங்கானா மாநிலம் கல்கொண்டா மாவட்டத்தின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.