ஒன்றல்ல, இரண்டல்ல 1,20,000 ஆண்டுகளில் பார்த்திடாத வகையில் நாம் கடந்துகொண்டிருக்கும் ஜூலை மாதம், மிக அதிக வெப்பம் பதிவான மாதமாக மாறியிருக்கிறது.
ஜூலையில், இதுவரை இந்த அளவுக்கு வெப்பம் பதிவானதில்லை என்று கூறப்படுவதோடு நிற்காமல், கடந்த ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ஆண்டுகளில் இதுபோன்றதொரு வெப்பம் ஜூலை மாதத்தில் பதிவானதே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதுதான் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
மனித குலம் செய்யும் பல காரணிகளால், ஜூலை மாதத்தில் வழக்கமான வெப்பநிலையைக் காட்டிலும் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருக்கிறதாம்.
இதையும் படிக்க.. லைக் போட்டால் சம்பளம்: எப்படி நடக்கிறது இந்த மோசடி?
பருவநிலை மாற்றம் மற்றும் எதிர்காலத்தில் பருவநிலையில் எவ்வாறு மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை எடுத்துக்கூறும் வகையில், உலகின் பல பகுதிகளில் இந்த ஜூலை மாதத்தில் கடுமையான வெப்பம் பதிவாகியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக வானிலை ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலஸ் வெளியிட்ட அறிக்கையில், இது தொடர்பான கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இதுவரை பதிவான அதிக வெப்பமான ஜூலை மாதமாக இருந்த நிலையில் இதை விட, தற்போது நாம் கடந்துகொண்டிருக்கும் ஜூலை மாதம் அதிக வெப்பம் பதிவாகியிருக்கிறது. உலகளவில், ஜூலை 2023ஆம் மாதம் ஒரு புதிய வெப்பநிலை பதிவான மாதமாக மாறியிருக்கிறது. எல் நினோவின் காரணத்தால், இந்த அளவுக்கு வெப்பம் பதிவாகியிருப்பதாகவும், 2024ஆம் ஆண்டு முதற்பகுதி வரை இதுபோன்ற அதிக வெப்பமான மாதங்கள் பதிவாகலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிக வெப்பம் மற்றும் இந்தியாவில் பல பகுதிகளில் மிகக் கடுமையான மழைக்காலமும், பருவநிலை மாற்றத்தின் மிகத் தீவிர அறிகுறிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.