ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குவதில் முனைப்பு காட்டி வரும் நிலையில் வோடஃபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன.
நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் 5ஜி சேவையை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை நாடு முழுவதும் 2,81,948 5ஜி டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகவும் வேகமாக தனது பணிகளை செய்து வருகிறது.
ஜூலை 7, 2023 நிலவரப்படி ஜியோ நிறுவனம் இதுவரை நாடு முழுவதும் 2,28,689 5ஜி டவர்களை நிறுவியுள்ளது. கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் இதற்கான பணிகளைச் செய்து வரும் ஜியோ, தனித்துவமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து சுனில் மிட்டலின் ஏர்டெல் 53,223 டவர்களை அமைத்துள்ளது.
நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவும், அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகிய இரண்டும் 5ஜி சேவையில் ஆர்வம் காட்டவில்லை.
வோடஃபோன் ஐடியா, தில்லி மற்றும் புணேவில் இதுவரை வெறும் 36 5G டவர்களை சோதனை அடிப்படையில் அமைத்துள்ளது. வோடஃபோன் ஐடியாவில் தற்போது நிதி இல்லாதது உள்ளிட்ட சில பிரச்னைகளைஇருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் அதன் 4ஜி நெட்வொர்க்கிற்கான சோதனைகளைத்தான் நடத்தி வருகிறது. பிஎஸ்என்எல்-ல் இன்னும் 4ஜி சேவைகளே இல்லாத நிலையில் 5ஜி சேவை கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியவுடன் அது உடனடியாக 5ஜி நெட்வொர்க்கிற்கு மாறும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.