வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடையவுள்ளது.
இன்று பகல் 12 மணி வரை 11.03 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாகவும், இன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை ஒரு மணி நேரத்தில் மட்டும் 3.39 லட்சம் பேர் மட்டும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்கு செலுத்திய வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியிருந்தது. கடந்த நிதியாண்டுகளில் வரி கணக்கைத் தாக்கல் செய்தவா்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தொடா் நினைவூட்டல்களை மத்திய அரசு வழங்கி வந்தது.
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த அவகாசம் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நாளைமுதல் வருமான வரித் தாக்கல் செய்வோருக்கு ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப புதிய முறை அல்லது பழைய முறையைத் தேர்ந்தெடுக்கலாம். புதிய முறையில் ஆண்டு வருமாணம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி கிடையாது.
புதிய முறையில் வருமான வரி தாக்கல் செய்யும்போது சேமிப்பு, முதலீடுகளுக்கு வரிவிலக்கு பெற முடியாது. சேமிப்பு, முதலீடுகளை காண்பித்து வரிவிலக்கு பெற நிணைப்பவர்கள் பழைய முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
கூடுதலாக வரி பிடித்தம் செய்யப்பட்டவர்கள், பணத்தை திரும்பப் பெற காலகெடுவுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.