சென்னை: ஒடிசாவில் விபத்தில் உயிர் தப்பியவர்கள் சென்னை திரும்பவும், ஒடிசாவில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் சென்னையிலிருந்து செல்லவும் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான பகுதியில், விபத்தில் உயிர் தப்பிய 250 தமிழர்களுடன் சிறப்பு ரயில் சென்னை நோக்கிப் புறப்பட்டது. இது இன்று மாலை சென்னையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே, சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 238 பேர் பலியாகினர். 900 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தமிழக பயணிகளை சென்னை அழைத்து வர புவனேஸ்வரத்திலிருந்த சிறப்பு ரயில் புறப்பட்டது. இதில் 250 தமிழர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
பெங்களூரு - ஹௌரா அதிவிரைவு ரயில், ஷாலிமர்-சென்னை சென்டிரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்று என மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின.
அதேவேளையில், ஒடிசாவில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்களுக்கு உதவ சென்னையிலிருந்து செல்வோருக்காக இன்று மாலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயிலில் பயணம் செய்ய உறவினர்கள் முன்பதிவும் செய்து வருகிறார்கள். இதில் பயணிப்பதற்கு கட்டணம் ஏதுமில்லை என்று ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்டிரலில், பயணிகளுக்கு உதவவும், நிலைமையை கட்டுக்குள் வைக்கவும் 200 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.