அரசுக்கு எதிரான பதிவுகளை இருட்டடிப்பு செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டியதாக மத்திய அரசின் மீது அந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது ட்விட்டர் நிறுவனத்துக்கு அரசு கொடுத்த அழுத்தம் குறித்து ஜாக் டோர்சி தற்போது தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பேசியுள்ளார்.
ஜாக் டோர்சி கூறியதாவது:
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது, அதுதொடர்பான பதிவு மற்றும் அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களின் ட்வீட்களை இருட்டடிப்பு செய்யுமாறு இந்திய அரசு ட்விட்டரிடம் கூறியது.
மேலும், இந்தியாவில் ட்விட்டரை முடக்குவோம் என்றும், ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதாகவும் மிரட்டியது. அதனை செய்யவும் செய்தார்கள். இத்தனைக்கும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு” என்று குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
ஜாக் டோர்சியின் இந்த குற்றச்சாட்டு புயலைக் கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.