வேகமாக மாறி வரும் உலகத்தில் நாட்டின் தன்னிறைவு என்பது ஒரு தெரிவு இல்லை எனவும், தன்னிறைவு நாட்டிற்கான தேவையாக மாறிவிட்டது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: 1971 ஆம் ஆண்டு போரின்போது நமக்கு அதிக அளவிலான ஆயுதங்கள் தேவைப்பட்டன. அப்போது நமக்கு ஆயுதம் வழங்க பலரும் மறுத்தனர். அதனால் போரில் நாம் மாற்று வழிகளை சிந்திக்க நேர்ந்தது. நமது வேண்டுகோளை மறுத்த நாடுகளின் பெயர்களை கூற விரும்பவில்லை. 1999 ஆம் நடைபெற்ற கார்கில் போரிலும் இந்தியாவுக்கு இதே நிலையே தொடர்ந்தது. கார்கில் போரின்போது நமது படைக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்கள் தேவைப்பட்டன. அந்த நேரத்தில் நமக்கு வழக்கமாக ஆயுதங்கள் வழங்கும் நாடுகளும் நமக்கு ஆயுதங்கள் வழங்க மறுத்தன. அதனால் நம்மை நாமே பலப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் இந்தியாவுக்கு வேறு வழியில்லை.
இந்தியா பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டது. நிலத்திலிருந்து ஆகாயம் வரை விவசாய எந்திரங்கள் முதல் கிரையோஜெனிக் என்ஜின் வரை இந்தியா ஒவ்வொரு துறையிலும் வேகமாக தன்னிறைவு பெற்று வருகிறது. வேகமாக மாறி வரும் இந்த உலகத்தில் தன்னிறைவு என்பது ஒரு தெரிவு இல்லை. தன்னிறைவு என்பது நாட்டுக்கான தேவை. இந்தியா அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாதுகாப்புத் துறையில் வேகமாக தன்னிறைவு பெற்று வருகிறது என்றார்.