தில்லியின் ஷாஹ்தராவின் ஃபர்ஷ் பஜார் பகுதியில் நடந்திருக்கும் விநோதமான சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த தம்பதியை வழிமறித்த கொள்ளையர்கள், அவர்களிடம் பணமோ, நகையோ இல்லை என்று தெரிந்ததும், இரக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.100 கொடுத்துவிட்டுச் சென்ற சம்பவம் வைரலாகியிருக்கிறது.
இவை அனைத்தும், அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதில், ஸ்கூட்டியில் வந்த கொள்ளையர்களில் ஒருவன், இறங்கி, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, கழுத்தில் காதில் இருக்கும் நகைகளைக் கழட்டிக்கொடுக்கும்படி மிரட்டுகிறான்.
குடிபோதையில் இருந்த கொள்ளையர்களைப் பார்த்ததும் பயந்துபோன தம்பதி, தங்களிடம் பணமோ, நகையோ இல்லை என்றும், அணிந்திருப்பவை அனைத்தும் போலி நகைகள் என்றும் பரிதாபமாகக் கூறியிருக்கிறார்கள்.
இதை நம்பாத கொள்ளையன், அந்த ஆணின் பாக்கெட்டில் சோதனை செய்த போது, அதற்குள் வெறும் 20 ரூபாய் நோட்டுதான் இருந்துள்ளது. எனவே, அவர்கள் சொன்னது உண்மை என்று தெரிந்ததும், குடிபோதையில் இருந்த கொள்ளையர்களின் மனம் மாறியது.
கொள்ளையடிக்க வந்தவர்களே, தம்பதியின் பரிதாப நிலையைப் பார்த்து, தங்களிடமிருந்து ரூ.100 தாளை அந்த நபரின் கையில் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்.
இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.