நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க பாஜக ஆதரவைக் கோரியுள்ளது.
நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதன் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
நாகாலாந்து
நாகாலாந்து மாநிலத்தில் 60 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சி அமைக்க 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தேர்தல் ஆணைய தரவுகளின்படி பாஜக தற்போது 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) 25 தொகுதிகளில் வென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 7, தேசிய மக்கள் கட்சி 5, சுயேட்சை 12 இடங்களில் வென்றுள்ளன.
இதன் மூலம் என்டிபிபி - பாஜக கூட்டணி நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
திரிபுரா
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பாஜக 55 இடங்களிலும் மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணியும் (ஐபிஎஃப்டி) போட்டியிட்டன.
இதில், பாஜக 32 இடங்களிலும், திப்ரா மோதா கட்சி 13 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம், திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
மேகாலயா
மேகாலயாவில் 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலைமுதல் எண்ணப்பட்டன. இதில், தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
முடிவுகளின்படி தேசிய மக்கள் கட்சி முன்னணியில் உள்ளது. ஆனால்
ஆட்சி அமைக்க 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதனால் அக்கட்சி ஆட்சி அமைக்க பாஜகவின் ஆதரவு கோரியுள்ளது.