தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா, மேகாலய முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று(செவ்வாய்க்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற மேகாலய சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) வெற்றி பெற்றது. தோ்தலுக்குப் பின்னா் என்பிபிக்கு பாஜக, ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், மாநிலத்தில் அக்கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைகிறது.
மேகாலய முதல்வராக கான்ராட் சங்மா இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். தலைநகர் ஷில்லாங்கில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
கான்ராட் சங்மாவைத் தொடர்ந்து பிரஸ்டன் தயான்சோங்(Prestone Tynsong) மற்றும் ஸ்னியாவ்பலாங் தார்(Sniawbhalang Dhar) ஆகிய இருவரும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, என்பிபி, பாஜக, யுடிபி உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அமைச்சா்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
முன்னதாக, மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை கூட்டப்பட்டது. தோ்தலில் வெற்றி பெற்ற 58 போ் எம்எல்ஏக்களாக பதவியேற்றனா். அவா்களுக்கு இடைக்கால சட்டப்பேரவைத் தலைவா் டிமோதி டி.ஷிரா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
மேகாலயத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில், யுடிபி வேட்பாளரும் மாநில முன்னாள் அமைச்சருமான லிங்டோ காலமானதால் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.