தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற சதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற சதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற சதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு


நாகர்கோவில்: தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

6.5 அடி உயர பீடத்தில் 8.5 அடி உயரமுள்ள வெண்கலத்தாலான கருணாநிதியின் முழு உருவ சிலையை முதல்வர் திறந்து வைத்துப் பேசுகையில், நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். சாதி கலவரம், மதக் கலவரத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது என்றும் திமுக ஆட்சியை அகற்றுவதற்காக கலவரத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என்றும் கூறினார் ஸ்டாலின்.

தொடர்ந்து முதல்வர் கூறியதாவது, தமிழகத்தை பிளவுபடுத்த நினைப்பவர்கள் திமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்றுகிறார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் நம் மீது விமரிசனத்தை வைக்கிறார்கள். பிரச்னைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, திமுகவினர் கௌரவம் பார்க்காமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தலாமா என்ற நோக்கில் சிலர் சதி செய்து வருகின்றனர் என்றும் நாகர்கோவிலில் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இன்றைக்கு நம்மைப் பார்த்து பாராட்டக்கூடியவர்கள் - வாழ்த்த கூடியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களும் - மாநிலத்தின் தலைவர்களும் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதையும் கடந்து, கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் - வெளிநாடுகளில் இருக்கும் பல்வேறு அமைப்புகள் - தமிழர்கள் நம்முடைய ஆட்சியின் சாதனைகளைப் பார்த்து, நாம் ஆற்றும் பணிகள் எல்லாம் பார்த்து மனதாரப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதேநேரத்தில் இன்றைக்கு நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், இந்த ஆட்சி இப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறதே, ‘திராவிட மாடல்‘ என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் ஒரு கவர்ச்சிகரமான - மக்களை கவரும் வகையில் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, எனவே தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம்முடைய பிழைப்பு என்னாவது? என்ற நிலையில் நம்மீது புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து, இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை எல்லாம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஜாதிக் கலவரத்தை தூண்டலாமா? மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஆங்காங்கே இருக்கும் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்தலாமா? என்றெல்லாம் திட்டமிட்டு அந்தக் காரியத்தில் இன்றைக்கு அவர்கள் எல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரையில் நம்மீது சொல்லப்படும் தேவையற்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அதிகம் பதில் சொல்வதில்லை. ஏனென்றால் அதைச் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் மூலமாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் அந்தப் பிரச்சாரத்தை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். யார் யாரெல்லாம் அதற்கு பதில் சொல்ல வேண்டுமோ, அவர்களை வைத்து நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

எனவே நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சிறப்பான கூட்டணியை நாம் அமைத்து - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்து, தொடர்ந்து - நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி அமைப்பின் தேர்தலாக இருந்தாலும் சரி, அதேபோல் அண்மையில் நடந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி - எல்லா தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை நாம் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே வெற்றியைத் தொடங்கி, ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அந்த வெற்றியை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். எனவே இதை அவர்களாக தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் அதே நேரத்தில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரையில், நான் 1-ஆம் தேதி நந்தனத்தில் நடந்த என்னுடைய பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறபோது, பல்வேறு மாநிலத்தின் தலைவர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு நான் சொன்னேன், “நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது - கூட்டணி சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெறுகிறோம்.

நமக்குள் இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கௌரவம் எல்லாம் பார்க்காமல், நாம் ஒற்றுமையாக இருந்து ஈடுபட வேண்டும்“ என்று வேண்டுகோளைதான் நான் எடுத்து வைத்தேன். அதைத்தான் நான் தொடர்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் செய்தீர்கள் என்றால் நிச்சயமாக இன்றைக்கு நாம் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதைத் தெளிவாக சொன்னேன்.

தலைவர் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தால் மட்டும் போதாது. கருணாநிதி எதற்குப் பாடுபட்டாரோ, எதற்கு பணியாற்றினாரோ, எதற்காக உழைத்தாரோ, என்ன லட்சியத்தை நமக்கு கற்றுக் கொடுத்தாரோ, அதை மனதில் ஏற்றுக்கொண்டு நாம் அந்தப் பணியை நிறைவேற்றினால்தான், அந்த சிலையைத் திறந்து வைத்ததற்கு உள்ளபடியே நாம் மரியாதை செலுத்துவதாக அமைந்திட முடியும் என்று முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com