பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி 4 நாள்கள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை(மார்ச் 8) இந்தியா வந்தார். ஆமதாபாத்தில் வந்திறங்கிய அவர், சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்று பாா்வையிட்டாா்.
அதன்பின்னர் நேற்று மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசியும் இந்திய - ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடங்கிவைத்து பார்வையிட்டனர். பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் வியாழக்கிழமை மாலை தில்லி வந்தடைந்தாா்.
தொடர்ந்து இன்று தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆன்டனி ஆல்பனேசி பேசி வருகிறார்.
இந்த பேச்சுவாா்த்தையில் வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் இருவரும் விரிவாக விவாதிக்கவுள்ளனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடா்பாகவும், பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய பிரதமராக ஆல்பனேசி கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றதையடுத்து, முதல் முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சீன அதிபராக மீண்டும் ஷி ஜின்பிங் தேர்வு!