தனது கர்ப்பிணி மருமகளை 15 மணி நேரம் கட்டாயப்படுத்தி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது பெரும் கண்டனத்திற்குரியது என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது சுட்டுரை பக்கத்தில் லாலு கூறுகையில்,
கடந்த வெள்ளியன்று தில்லி, பிகார் மாநிலங்களில் 15 இடங்களில் லாலு பிரசாத்தின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தேஜஸ்வி யாதவின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அங்கு அவர் தனது மனைவி ராஜ்ஸ்ரீயுடன் வசித்து வருகிறார். கர்ப்பத்தின் இறுதிக்கட்ட நிலையில் உள்ள தனது மனைவியை வலுக்கட்டாயமாக 15 நேரம் அமர வைத்து சோதனை நடத்தினர்.
"நான் கறுப்பு எமர்ஜென்சி காலத்தைப் பார்த்தேன், அதற்கு எதிராகவும் போராடினேன். கர்ப்பிணி மருமகள் மட்டுமின்றி என் பேரக்குழந்தைகள் மற்றும் மகள்களையும் அமலாக்கத்துறை நீண்ட நேரம் உட்கார வைத்தார்கள். பாஜக மிகவும் கீழ்நிலையில் இருப்பது நன்றாகத் தெரிகிறது என்று லாலு பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடனான எனது போராட்டம் தொடரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர்கள் முன் தலைவணங்கமாட்டோம் என்று அவர் மேலும் கூறினார்.
லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரிகள் ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரின் வீடுகளிலிருந்து ரூ.53 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்கம், 540 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 1900 அமெரிக்க டாலர்களை அமலாக்கத்துறை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.