அண்மைக்காலமாக இன்ஃப்ளூயன்ஸா-ஏ வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவத் துறையின் தலைவர் கூறுகையில்,
சமீப காலமாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வேமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் ஏற்படாமல் இருக்க தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, தில்லியில் கடந்தாண்டைக் காட்டிலும் சுமார் 50 சதவீதம் பேர் வருடாந்திர காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். கரோனா தொற்றுக்குப் பிறகு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால்தான் தடுப்பூசியை எடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.
இருப்பினும், தடுப்பூசி செலுத்திய உடனேயே வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தாது. தடுப்பூசி எடுக்க நாங்கள் ஆலோசனை கூறவில்லை. உடலில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தேவைப்படும்.
மேலும், ஏற்கெனவே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொற்றுநோயைத் தடுக்க முகக்கவசம் மற்றும் சுகாதாரம் போன்ற பாதுகாப்பான பொது நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றலாம்.
இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் திரிபு வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுவரை இரண்டு பேரின் உயிரை இது பலி வாங்கியுள்ளதாக மத்திய அரசுக்கு எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.
இந்த தொற்று நோய் 3-5 நாள்கள் நீடிக்கும் காய்ச்சலையும், மூன்று வாரங்கள் வரை நீடித்த இருமல் மற்றும் சளியையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு மக்கள் சுயமருந்து மற்றும் ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.