மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும், பிரிட்டனியில் இந்திய நாடாளுமன்றம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஆளுங்கட்சியும் மோதிக் கொண்டதால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அதே சமயம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.
இதனால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
முன்னதாக இதே விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.