மத்தியப் பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சௌகான் சனிக்கிழமை அறிவித்தார்.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் சௌகான் கூறுகையில்,
மத்தியப் பிரதேசத்தில் மத மாற்றத்திற்கு எதிராக நாங்கள் ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம். இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதால், அனைவரும் இந்த படத்தைப் பார்க்க வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகள், மகள்கள் பார்க்க வேண்டிய படம் இது. இதனால்தான் மத்தியப் பிரதேச அரசு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது.
லவ் ஜிகாத், மத மாற்றம் மற்றும் பயங்கரவாதத்தின் சதித்திட்டங்கள் மற்றும் அதன் கொடூரமான முகத்தை இந்த திரைப்படம் அம்பலப்படுத்தியுள்ளது. நொடிப்பொழுதில் உணர்ச்சிவசப்பட்டு லவ் ஜிகாத் வலையில் சிக்கி பெண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படிச் சீரழிக்கிறார்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
கேரளா ஸ்டோரி திரைப்படம் அந்த மாநிலத்தில் நடக்கும் பயங்கரவாத சதிகளை வெளியே கொண்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.