சென்னை: நாடு முழுவதும் வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த மறுநாளே, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியிருக்கிறது.
நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்தாலும், வெப்ப அலை இருக்காது என்றும், வெப்ப அலை தணிந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கோடை வெப்பம் சென்னை உள்ளட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை தாக்கி வரும் நிலையில், இன்று அது சற்று அதிகரித்தே காணப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது, இன்று கோடை வெப்பம் கொளுத்தும் நாளாக உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 10 நாள்களுக்குப் பிறகு 40 டிகிரி செல்சியஸைத் தாண்டுகிறது, அதே நேரத்தில் புறநகர்ப் பகுதிகள் பலவும் 41 டிகிரி செல்சியத்தைத் தாண்டும்.
வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் இன்று வெப்பமான நாளாக மாறியது. வட தமிழகத்தைப் பொறுத்தவரை, இப்படி வெப்பமான நாள்கள் ஜூன் 5 வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெங்களூரு, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் நாள்தோறும் மழை தொடரும். இந்த வரிசையில் வேலூர், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் உள்பகுதிகளில் மழை பெய்யக்கூடும். கொடைக்கானலிலும் ஆங்காங்கே மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.