இனம் சார்ந்த கலவரங்களை தூண்டிவிட்டு மணிப்பூர் போன்ற சூழலை மேற்கு வங்கத்தில் பாஜக உருவாக்க நினைப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில அமைச்சர் பிர்பாஹா ஹன்ஸ்டாவின் வாகனம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், அந்த சம்பவத்தின் பின்னணியில் குர்மி இன மக்கள் இல்லை எனவும், பாஜக உள்ளது எனவும் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்தின் பின்னணியில் பாஜக தான் இருந்தது. அதே போன்ற சூழலை அவர்கள் மேற்கு வங்கத்திலும் ஏற்படுத்த நினைக்கிறார்கள். ஆதிவாசிகள் குர்மி இன மக்களுடன் சண்டையிடும் சூழலை ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். இதனை பயன்படுத்தி ராணுவத்தை மாநிலத்தில் கொண்டு வந்து, கண்டவுடன் சுடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். மாநிலத்தில் இனக் கலவரத்தை ஏற்படுத்த நினைப்பவர்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. நேற்று (மே 26) நடைபெற்ற வன்முறையை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த வன்முறையின் பின்னணியில் குர்மி இன மக்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. குர்மி இன மக்கள் என்கிற போர்வையில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.