புது தில்லி: தில்லியின் ரோஹினி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த அரசு மின்சாரப் பேருந்து ஒன்று சாலையில் இருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதில், ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
அவந்திகா அருகே விஷ்ராம் சௌக் பகுதியில் நடந்த இந்த விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியிருக்கிறது.
அந்த விடியோவில், தில்லி போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து, வேகமாக வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை சாலையில் இருந்த கார், ரிக்சா, இருசக்கர வாகனங்கள் மீது இடித்துக் கொண்டு அவற்றை இழுத்தபடியே செல்கிறது.
இறுதியாக சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி அவற்றை இடித்துக்கொண்டு நிற்கிறது அந்த மின்சாரப் பேருந்து.
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் அங்கு மரணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.