நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடாண்டா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் நேபாளத்துடன் இந்தியர்கள் தோளோடு தோள் நிற்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.