சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தொடர்பான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
அமலாக்கத்துறை சோதனைகள் குறித்துப் பேசிய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆனந்த் சர்மா, “சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் குறித்த அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. இவை அனைத்தும் பாஜகவின் தேர்தல் பிரசாரங்களின் ஒருபகுதியே ஆகும்.
எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைப்பதற்காக அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாஜகவின் தேர்தல் பிரிவான அமலாக்கத்துறை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்கிறது. என்ன வேண்டுமானாலும் குற்றச்சாட்டு சொல்கிறது. தேர்தல் சமயத்தில் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.
ஆட்சிக்கு வந்த 2018-ஆம் ஆண்டு முதல் சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி தீவிரமாக உழைத்து வருகிறது. 2018-ல் பெற்ற வெற்றியைப் போல மிகப்பெரிய வெற்றியை சத்தீஸ்கரில் அடைவோம்.” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஹரியாணா: கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி!
முன்னதாக, நவம்.2-ஆம் தேதி சத்தீஸ்கரில் பல இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேலுக்கு மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்.7-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நவம்.17-ஆம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.