சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் ராம் கோபால் மற்றும் முன்னாள் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் ஆகிய இருவரும் இன்று (நவம்.11) பாஜகவில் இணைந்தனர்.
ஜெய்ப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
அவர்களை வரவேற்றுப் பேசிய சி.பி.ஜோஷி, “பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாகி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அசோக் தன்வார் 2021 பிப்ரவரியில் அப்னா பாரத் மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். அதன்பின் 2021 நவம்பரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதையும் படிக்க: கற்றாழை வளர்க்கிறார்கள் கலிபோர்னியாவில்! செழிக்கிறது செல்வம்!!
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.