மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ. 17) காலை பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று தோ்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மனைவி மற்றும் மகன்களுடன் குடும்பத்துடன் வந்து வாக்கினைப் பதிவு செய்தார்.
இதையும் படிக்க | சத்தீஸ்கர், ம.பி. தேர்தல்: காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முதல்வர் பதவி எனக்கு முக்கியமானது அல்ல. அது கட்சிதான் முடிவு செய்யும். மத்திய பிரதேச மாநிலமும் இந்த நாடும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய வரலாற்று வெற்றியை அடையும். காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறாது. அவர்கள் பதவிக்கு வந்தால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பாஜகவுக்கு மக்களின் அன்பும் ஆதரவும் உள்ளது' என்று பேசினார்.