பணக்காரர்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது பாஜக என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ராஜஸ்தானில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தானில் வல்லப நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,
'நாட்டில் எந்த சாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் எப்படி பங்கீடு குறித்துப் பேசுவது?
ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
முன்னதாக, தான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர் என்று பிரதமர் மோடி சொன்னதில் இருந்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறேன். ஆனால், அப்போதெல்லாம் இந்தியாவில் ஒரே சாதி, ஏழை சாதி என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் இந்தியாவில் இன்னொரு சாதியும் உள்ளது. அதைக் கூற அவர் மறந்துவிட்டார். அது பணக்காரர் சாதி. அது சிறப்பு சாதி. அதானி, அம்பானி சாதி.
பாஜக, அந்த பணக்காரர்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது. குறிப்பாக அதானி குறித்து மட்டுமே பிரதமர் மோடி சிந்திக்கிறார். அவர்களுக்கே அனைத்து பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் நோக்கிலே பாஜக செயல்படுகிறது. வெறுப்பு பிரசாரத்தை செய்கிறது.
பாஜக, ஆரஎஸ்எஸ்ஸின் ஒரே நோக்கம், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள் ஆகியோர் பணம் வைத்திருக்கக்கூடாது என்பதே. மாறாக பணக்காரர்களுக்கு அனைத்து பணத்தையும் வழங்குவது.
ஆனால், காங்கிரஸ் கட்சி பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கும். அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும்' என்றார்.