இது மோடியின் தேர்தல் அல்ல என்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று(நவ.25) 199 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கரண்பூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் குா்மீா் சிங் சமீபத்தில் காலமானதை அடுத்து அந்த ஒரு தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். சுமாா் 5.25 கோடி பேர் வாக்காளா்கள். இதற்காக மாநிலம் முழுவதும் 51,507-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.74 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி இருந்து வரும் நிலையில் அதனைத் தக்கவைக்க காங்கிரஸும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடும் போட்டியில் உள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சர்தார்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பிரதமர் மோடியின் பேச்சில் எந்த பொருளும் இல்லை. இது மாநில சட்டப்பேரவைத் தேர்தல். மோடியின் தேர்தல் அல்ல. நாங்கள் இங்கேதான் இருப்போம். தொடர்ந்து மாநில வளர்ச்சி பற்றி பேசுவோம்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். நாளை முதல் ராஜஸ்தானில் பாஜக என்ற ஒன்றே இருப்பதே தெரியாது. தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவர்கள் இங்கு வருவார்கள்.
காங்கிரஸ் அளித்துள்ள 7 முக்கிய வாக்குறுதிகளும் மிகவும் முக்கியத்துவம் மற்றும் திறன் வாய்ந்தவை' என்று பேசியுள்ளார்.