உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல்ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
பெண்கள் உடல்ரீதியாக அல்லது பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்வதில் தென்கிழக்கு ஆசியப் பகுதி 33% என்ற அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பகுதியின் இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் இதுகுறித்து, 'வன்முறை, வற்புறுத்தல் இல்லாத வாழ்க்கையை வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. பெரும்பாலான பெண்கள், தங்களுடன் வாழும் நபர்களால்தான் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக மிகவும் நெருங்கியவர்களால்தான் பாதிக்கப்படுகிறார்கள்' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | நம்பிக்கையும் உண்மையும்: தடுப்பூசிகள் பாதுகாப்பானதா? அவசியம்தானா?
மேலும், 'பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குறிப்பாக நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் கொடுமைகள், பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடனடியாகவும் அதேநேரத்தில் நீண்ட காலத்திற்கும் கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவை தீவிரமான உடல், மன, பாலியல் மற்றும் இனப்பெருக்க பிரச்னைகளை உள்ளடக்கியது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் இன்றைய சூழ்நிலையில் பொது சுகாதார பிரச்னைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது. பெண்களுக்கு எதிரான இந்த கொடுமைகள் தடுக்கப்படக்கூடியவை.
ஆனால், பாலின சமத்துவமின்மை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இன்று ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாறி வருகிறது. குறிப்பாக, தனிப்பட்ட, குடும்பம், சமூகத்தில் ஏற்படும் காரணிகளால், மிகவும் நெருங்கியவர்களால் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் அதிகம் ஏற்படுவதை சான்றுகள் நிரூபிக்கின்றன' என்றார்.