எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள மாநில அரசு விரும்பவில்லை என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்திர பிரதேச சட்டப்பேரவையின் நான்கு நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள உ.பி. அரசு விரும்பவில்லை. பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
ஆனால் அவர்கள் எதையும் கேட்கவும் விரும்பவில்லை, பதில் சொல்லவும் விரும்பவில்லை. மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவ உள்கட்டமைப்பு முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை.
6,900 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன. புதிய முதலீட்டு திட்டங்கள் எங்கும் காணப்படவில்லை.
குழியில்லா சாலைகள் கனவாகவே தொடர்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே சட்டப்பேரவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.