தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநில மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும், அவரது வாக்குறுதிகள் காலவதியாகிவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
தெலங்கானா மாநிலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் வளர்ச்சியைக் கொண்டுவர உருவாக்கப்பட்டது. ஆனால் ஹைதராபாத்தைத் தாண்டி மாநிலம் எந்த வளர்ச்சியும் காணவில்லை.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டிலேயே இளைஞர்கள் வேலையின்மை விகிதம் தெலங்கானத்தில் அதிகரித்துள்ளது என்றும், கான்ஸ்டபிள்களைத் தவிர தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆள்சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லை என்றார்.
மாநிலத்தில் தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும். 9 ஆண்டுகளாக, மாநிலத்தில் கேசிஆர், அவரது மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோரால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கே.சி.ஆரின் வாக்குறுதிகள் அனைத்தும் காலாவதியாகிவிட்டதாகவும் இது காங்கிரஸுக்கான நேரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிஆர்எஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முயற்சித்து வரும் நிலையில், தென் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது.
தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.