அடுக்குமாடி குடியிருப்பில் தீபம் ஏற்றும்போது பயங்கர தீ விபத்து - 6 வயது சிறுமி பலி!

கார்த்திகை பூர்ணிமாவையொட்டி வீட்டில் விளக்கேற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஞ்சி :  வடமாநிலங்களில்  கார்த்திகை பூர்ணிமா  தினத்தையொட்டி  நேற்று (நவ. 27)  மக்கள் தங்கள் வீடுகளில்  விளக்கேற்றி கொண்டாடினர். 

இந்தநிலையில், ஜார்க்கண்ட்டின் ஹசாரிபாக் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்து காணப்படும் மால்வியா மார்க் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கார்த்திகை பூர்ணிமா  தினத்தையொட்டி நேற்று மாலை மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அருகிலிருக்கும் கட்டிடங்களுக்கும் தீ மளமளவென பரவியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், 5 மணி நேரம் கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நேற்று மாலை நிகழ்ந்த இந்த கோர விபத்தில் அன்னு என்ற 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com